Filed Under:  கல்வி & வேலைவாய்ப்பு

சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 12-ல் தேர்வு

14th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக ((www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.

வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17. தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

கல்வித் தகுதி என்ன? குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100. பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நிரந்தரப் பதிவு: தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

-நண்பன்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை