Filed Under:  தேர்தல் ஸ்பெஷல்

அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு

28th March 2011   ·   0 Comments

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றார் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்.

இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர்.

நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம்.

இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன்.

தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்புக்காக, சுயநலத்தோடு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நாட்டில் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போஃபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது.

இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

என்னுடைய இயக்கத்தில் வெளிவந்துள்ள “சட்டப்படி குற்றம்’ படத்தில் நாட்டின் அவலங்களை, அசிங்கத்தை தோலுரித்துக் காட்டியுள்ளேன். இந்தப் படத்தை பார்க்கும் மக்களுக்கு மனம் மாற்றம் ஏற்படும்.

இந்தப் படம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வரக்கூடாது என்பதற்காக பலரும் பெரும் முயற்சி எடுத்தார்கள். படத்தை அனுமதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இருப்பினும், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட்டுள்ளோம் என்றார் அவர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.