Filed Under:  விளையாட்டு

ஐ.சி.சி., தலைவர் சரத் பவார்

2nd July 2010   ·   0 Comments

ஐ.சி.சி., புதிய தலைவராக சரத் பவார் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர், இரண்டு ஆண்டு காலம் இப்பதவியில் நீடிப்பார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) தலைவராக இங்கிலாந்தின் டேவிட் மார்கன் இருந்தார். இவரது பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய தலைவராக நேற்று சரத் பவார் முறைப்படி பொறுப்பேற்றார். இதற்கான அறிவிப்பு சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி., ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 1997ல் ஐ.சி.சி., தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியா வகித்தார். இவருக்கு பின், இப்பெருமை பெறும் இரண்டாவது இந்தியராகிறார் சரத் பவார்.
அரசியலில் இருந்து:
தற்போது 69 வயதாகும் சரத் பவார், அரசியலில் இருந்து கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் நுழைந்தவர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான இவர், தற்போது மத்திய விவசாய துறை அமைச்சராக உள்ளார். கடந்த 2001ல் முன்னாள் கேப்டன் அஜித் வடேகரை தோற்கடித்து, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார். பின் டால்மியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த இவர், 2005ல் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) தலைவரானார். இப்பதவியில் 2008 வரை நீடித்தார். இந்தக் கால கட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பஞ்சம் ஏற்பட, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து விவசாய துறையை கவனிக்காமல் பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில், பவார் அதிக கவனம் செலுத்துவதாக விமர்சனம் எழுந்தது.
ஐ.சி.சி., தலைவர்:
அடுத்து ஐ.சி.சி., தலைவர் பதவியை குறி வைத்தார் பவார். இம்முறை இங்கிலாந்தின் டேவிட் மார்கனை வெல்வது கடினம் என்பதை <உணர்ந்தார். உடனே சமரச ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன்படி 2008ல் தலைவர் பொறுப்பை மார்கன் ஏற்றார். வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதை <உணர்ந்து, மிகச் சரியான நேரத்தில் தற்போது தலைவர் பதவியை பவார் ஏற்றுள்ளார்.
ஐ.பி.எல்., சர்ச்சை:
ஐ.பி.எல்., அமைப்பில் லலித் மோடியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் பவார் தான் பக்கபலமாக இருந்தார். பின் ஊழல் புகார் காரணமாக மோடி “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புனே அணியின் பங்குகளை வாங்கியதில் பவாரின் குடும்பத்துக்கும் பங்கு உண்டு என்ற சர்ச்சை ஏற்பட்டது. தற்போது ஐ.சி.சி., தலைவராக பதவி ஏற்றுள்ள பவார், மீண்டும் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.
புதிய பணியில் பவார் சிறப்பாக செயல்பட டேவிட் மார்கன் வாழ்த்தினர். இது குறித்து அவர் கூறுகையில்,”"கடந்த 2008 முதல் ஐ.சி.சி., துணை தலைவராக பவார் திறம்பட பணியாற்றினார். இதே போல ஐ.சி.சி., தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட வேண்டும்,”என்றார்.
சரத் பவார் கூறுகையில்,”"மார்கன் வகுத்த கொள்கைளின்படி ஐ.சி.சி., செயல்பட்டது. இதனை தொடர வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது,”என்றார்.

இந்திய-பாக்., தொடர்

கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு பாதிக்கப்பட்டது. இதற்கு புத்துயிர் கொடுக்க சரத் பவார் விருப்பம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,”" இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போட்டிகள் நடக்க வேண்டும் என ஐ.சி.சி., விரும்புகிறது. சமீபத்தில் மத்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்கள் பாகிஸ்தான் சென்றது நல்ல விஷயம். இரு நாட்டு அரசுகளும் அனுமதி அளிக்கும் பட்சத்தில், மீண்டும் போட்டிகளை நடத்த ஐ.சி.சி., ஊக்கம் அளிக்கும்,”என்றார்.

ஹாவர்டு போர்க்கொடி

ஐ.சி.சி., துணை தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹாவர்டு போட்டியிட்டார். இவர், இலங்கையின் முரளிதரன் பந்தை எறிவதாக முன்பு குற்றம்சாட்டினார். தவிர, ஜிம்பாப்வேயில் நடக்கும் ராபர்ட் முகாபே ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இவருக்கு ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மட்டும் ஆதரவு தெரிவித்தன. இறுதியில் தேவையான 7 ஓட்டுகள் கிடைக்காததால், ஹாவர்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஐ.சி.சி., யில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஹாவர்டு கூறுகையில்,”"சுழற்சி முறையிலான இப்பதவிக்கு எனது பெயரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சங்கங்கள் பரிந்துரை செய்தன. இந்த மனுவை நிராகரித்துள்ளனர். போட்டியில் இருந்து நான் விலகப் போவதில்லை,”என்றார்.
ஐ.சி.சி., தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீடு கூறுகையில்,”"அனுபவம் இல்லை என்ற அடிப்படையில் ஹாவர்டு பெயர் நீக்கப்படவில்லை. முரளிதரன், ஜிம்பாப்வே பிரச்னை தான் முக்கிய காரணம். கிரிக்கெட் நிர்வாகம் பற்றி சரத் பவாருக்கு கொஞ்சம் தான் தெரியும். மத்திய அமைச்சராக உள்ள இவர், 110 கோடி மக்களின் உணவு தேவையை கவனிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார். எனவே, பகுதி நேர ஐ.சி.சி., தலைவராக தான் செயல்பட முடியும்,”என்றார்.

அரசியல் காரணமல்ல

ஹாவர்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமல்ல என சரத் பவார் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,”"ஹாவர்டு பெயர் நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் ரீதியான காரணம் எதுவும் இல்லை. இவருக்கு பதில் வேறு ஒருவரின் பெயரை வரும் ஆக., 31ம் தேதிக்குள் பரிந்துரை செய்யும்படி ஆஸ்திரேலிய, நியூசிலாந்து கிரிக்கெட் சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளோம்,”என்றார்.

தீர்ப்பு மறுபரிசீலனை

உலக கோப்பை கால்பந்து தொடரில் நடுவர்களின் தவறான தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை அமல்படுத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்பம் மற்றும் செலவுகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

Tags:  , , , ,

By

Readers Comments (0)


Comments are closed.