Filed Under:  இந்தியா

கர்நாடகம்-11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

29th October 2010   ·   0 Comments

11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இதில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பாஜக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டு கண்டங்களைத் தாண்டி விட்டது. தற்போது 3வது கண்டத்திற்கு வந்து நிற்கிறது.

முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களையும், ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் போபய்யா.

பின்னர் நடந்த வாக்கெடுப்பில் குரல் ஆதரவு மூலம் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் சபையில் பெரும் அமளி மூண்டது. பின்னர் 16 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் பரத்வாஜ் 2வது நம்பி்ககை வாக்கெடுப்பு கோர எதியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி 3வது நாளே மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க அனுமதிக்குமாறு 5 சுயேச்சைகளும் கோரினர் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் நடந்த வாக்கெடுப்பிலும் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 11 பாஜக அதிருப்தியாளர்களின் வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அக்டோபர் 18ம் தேதி இரு வேறு தீர்ப்புகளை வெளியிட்டது. இதையடுத்து 3வது நீதிபதிக்கு வழக்கு விடப்பட்டது. மூன்றாவது நீதிபதியான சபாஹித் அக்டோபர் 22ம் தேதி இந்த வழக்கை விசாரித்து பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தார். அந்தத் தீர்ப்பு இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.

இன்று நீதிபதி சபாஹித் வழங்கவுள்ள தீர்ப்பைப் பொறுத்துதான் எதியூரப்பா அரசு தப்பிப்பதும், கவிழ்வதும் உள்ளது. தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக வந்தால் எதியூரப்பா அரசு மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநரால் உத்தரவிடப்படும். அதில் எதியூரப்பா அரசு தப்புவது கடினமாகி விடும். அதேசமயம், தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்குப் பாதகமாக வந்தால் அரசு தப்பும்.

எனவே இன்றைய தீர்ப்பு கர்நாடக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமான தீர்ப்பாகவும் அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு மாநில ஆட்சியைக் கலைப்பது குறித்து மத்திய அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் கர்நாடகத்தில் எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கலைக்கப்பட்ட வழக்குதான் தற்போது முக்கிய முன்னுதாரணமாக உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

தீர்ப்பையொட்டி கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.