Filed Under:  இந்தியா

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை: மம்தா

29th October 2010   ·   0 Comments

அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற மேற்கு வங்க விளையாட்டு வீரர்களுக்கு கொல்கத்தா மாநகராட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் ரயில்வே துறை முனைப்பாக உள்ளது. மேலும், அதற்காக பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வரும் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இதையொட்டி வில்வித்தை, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றிற்கு என 4 அகடமிகளை அமைக்கவிருக்கிறது.

இதில் குத்துச்சண்டை, மல்யுத்தம் அகாடமிகள் டெல்லியிலும், டேபிள் டென்னிஸ் அகாடமி சிலிகுரியிலும், வில்வித்தை அகாடமி கொல்கத்தாவிலும் அமைக்கப்படும்.

வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம் ஆகியவற்றில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு கழகம் கண்டறிந்துள்ளது. இது தவிர கூடதலாக 4 விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து வீரர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும், மற்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் ரயில்வேயில் வேலை அளிக்கப்படும்.

வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி, ஊனமுற்ற நீச்சல் வீரர் பிரசாந்தாகர்மகார், ஊனமுற்ற தடகள வீரர் பிரவின் சங்கர், ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த சமிந்தாதாஸ் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக வேலை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.