Filed Under:  தமிழ் நாடு

சமுதாயக் கண்மணிகளே…! -எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம்

28th April 2011   ·   0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான களப்பணியாற்றியமைக்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.
நமது மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட 231 தொகுதி களிலும் நீங்கள் ஆற்றிய கடுமையான களப்பணி பற்றி நெகிழ்ச்சியுடன் தோழமைக் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் செய்தியாளர்களும் வியந்து பாராட்டினார்கள்.

நெருப்பாக சுடர்விட்டு நம் தொண்டர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் என்னிடம் உருக்கமாக குறிப்பிட்டார். தேர்தல் பணி என்றால் பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், நமது தொண்டர்கள் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கள் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆற்றிய களப்பணிகள் அபாரம். எவ்வித சுயநலனுமின்றி பாடுபட்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நற்பேறுகளையும் வழங்க வேண்டும் என வல்லவனிடம் மன்றாடுகிறேன்.

வெறும் உடல் உழைப்பை மட்டும் செலுத்தியதுடன் நிற்காமல் நமது தொண்டர் களில் அநேகர் தஹஜ்ஜத் தொழுகைக்காக நடுநிசியில் எழுந்து இறைவனிடம் நமது வேட்பாளர்களும் நமது கூட்டணியும் வெற்றி பெற வேண்டுமென உருக்கமாகக் கேட்ட பிரார்த்தனைகளும் உம்ராவின் போது இறைஞ்சிக் கேட்ட பிரார்த்தனைகளும் வீணாகாது.

இந்த சகோதரர்களில் பலர் எனக்கு தஹஜ்ஜத் நேரத்தில் குறுந்தகவல் அனுப்பியும், தொலைபேசியில் அழைத்தும் “தஹஜ்ஜத் தொழுது துஆ கேட்டுவிட்டீர்களா” என்று கேட்கவும் தவறியதில்லை. வெறும் உழைப்பு மட்டும் போதாது இறைவனின் உதவியும் வந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்ட நமது கழக கண்மணிகளின் இந்த அறப்பணிக்கு நற்கூலி இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கிடைக்கும்.

நடந்து முடிந்த தேர்தல் நமது சமுதாய ஒற்றுமையைப் பறைசாற்றிய தேர்தலாக அமைந்தது. நாம் எடுத்த நிலைப்பாட்டை பெரும்பான்மையாக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டதை களப்பணிகளின் போது எதார்த்தமாகக் காண முடிந்தது. பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், ஜமாஅத்துகள், சங்கங்கள் நம்மைப் பெருமளவில் ஆதரித்தன. களப்பணிகளையும் சளைக்காமல் செய்தார்கள். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் ஹிந்து, கிறிஸ்தவ அமைப்புகள், பல்வேறு சாதிச் சங்கங்கள் என்று பல்வேறு தரப்பினரும் நமது வேட்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து களப்பணி ஆற்றி தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்திற்கு வலிமை சேர்த்தார்கள்.

ஆனால், எப்போதுமே நாம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதை மட்டுமே தனது ஒரே கொள்கையாகக் கொண்டு செயல்படும் ஒரு நபர் மட்டும் நம்மை எதிர்த்தார். இல்லை, நம் மீது வசைமாரி பொழிந்தார். நான் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு வந்து முஸ்லிமல்லாதார் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த மனநோயாளி பேசினார்.

மறுநாள் இந்த கூட்டம் குறித்து என்னிடம் கருத்து தெரிவித்த அஇஅதிமுகவைச் சேர்ந்த ஹிந்து அன்பர்கள் சிலர் “பி.ஜே.பி.க்கு பி.ஜே. நேற்று ஓட்டுக் கேட்டுவிட்டுச் சென்றார்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள. என் மீதும் நமது கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி மீதும் பொதுவாக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து கண்மணிகள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினார் மனநோயாளி. இதற்கெல்லாம் நாம் எவ்வித பதிலும் சொல்லவில்லை. காரணம் நாளை மறுமையில் படைத்தவன் சன்னதியில் கணக்கு தீர்த்துக் கொள்வோம்.

நமது பாவச் சுமையை தனது அவதூறு பேச்சுகள் மூலம் குறைத்தமைக்காக அவருக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். மார்க்க ரீதியாகவும் பொதுவான நிலையிலும் தடம் புரண்டு செயல்படும் அவருக்கு இறைவன் நேர்வழி காட்டப் பிரார்த்திக்கின்றோம். இதே நேரத்தில் அவரது அமைப்பைச் சேர்ந்த பலர் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் நமக்கு ஆதரவாக செயல்பட்டதையும் நான் அறிவேன். அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
வஸ்ஸலாம்
அன்புடன்
எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.