சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல: கி.வீரமணி
30th July 2011 · 0 Comments
தஞ்சை வல்லத்தில் இன்று (30.7.2011) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை திடீரென்று காவல்துறையினர் கைது செய்து திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பொதுவாக எல்லோருக்குமே இது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டியவர்களை காரண காரியம் இல்லாமல் இது போல கைது நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? என்ன குற்றம் செய்தார்கள் என்பதுகூட வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்படுவது என்பது கண்டிக்கப்படக் கூடியது.
உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும். பொது வாழ்க்கையில் கருத்துக்களால் மாறுபடுகிறவர்களை எல்லாம் கைது செய்யலாமா? அடக்குமுறை ராஜ்ஜியம் இங்கு நடக்கிறது என்பதுதான் பொருளாகுமே தவிர, ஜனநாயகத்திற்கு இது அழகாகாது.
குறிப்பாக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. சிறைச்சாலைக்குப் போக அவர் அஞ்சக் கூடியவர் அல்ல என்றாலும், அதற்குரிய காரண காரியத்தோடு அரசு விளக்கினால் அவர் அதை மகிழ்ச்சியோடு ஏற்பார். எதிர்கொள்வார்.
ஆனால் இந்த நிலை தொடரக்கூடாது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By P.S.Md Ali
Readers Comments (0)
Comments are closed.


