Filed Under:  தமிழ் நாடு

ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து மொத்த தமிழகமும் குரல் எழுப்ப வேண்டும் : வைகோ

31st July 2011   ·   0 Comments

நெல்லையில் ம.தி.மு.க.,சார்பில் வரும் செப்டம்பர் 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது.கட்சி பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.ஆலோசனைக்கு பிறகு வைகோ, மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளை பராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் டில்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும்.

இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.

இதன் மூலம் தெற்கு சீமைக்கே பாதிப்பு ஏற்படும். இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். அதற்கு வழிவைக்க கூடாது என எச்சரிக்கிறேன் என்று கூறினார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.