நடிகர் சிவக்குமாருக்கு எச்சரிக்கை!!
18th November 2011 · 0 Comments
திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும் கல்லூரி வளாகத்தில் உங்கள் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் “கழிப்பறை வடிகாலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது” என்று பயமுறுத்தி பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத்தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.
பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
“பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்” என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.
உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது?
குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?
மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?
தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது என்பது என் கணிப்பு. நடிகை குஷ்பு “தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை” என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது.
உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை? தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
உங்களின் இந்தச் செயலுக்கு வருந்தி மானமுள்ள மறத் தமிழர்களிடம் நீங்கள் மண்டியிடுவது எப்போது?
- அப்துல் கையூம்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


