நில்லாது பறக்கும் குருவி….-அப்துல்லாஹ்
6th February 2012 · 0 Comments
நிசப்தமான நடுப்பகலில்
நீலவானத்தின் தவநிலை கீறி
தடம் பதிந்தும் பதியாமலும்
தன் மெல்லிய சிறகடித்தலில்
மிதந்து பறந்தது சின்னக்குருவி
அதற்கென சில நோக்கங்கள்
இரையை தேடி மட்டுமே ….
பிரிதலின்பால் சிறகடிப்பு பொதுவானது
பரப்பைக் கடக்கும் அவை
நோக்கமொன்றைக் கைகொண்டு
தன் கூட்டை மறந்து
தவிக்கும் குஞ்சுகளைப் பிரிந்து
விரைகின்றன இரைதேடி….
சிறகடிப்பில் தூரம் கணக்கல்ல
சிதறிக் கிடக்கும் உறவுகள்
சின்ன இடைவெளிக்குப் பிறகு
திரும்பிய பறவையின்
அடைதலின் தருணத்தில் அங்கு
அணையுடைத்து மகிழ்ச்சி வெள்ளம்
அது…
கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா….
மகிழ்ச்சி அடுத்த சிறகடிப்பு வரை மட்டுமே….
முடிவற்ற பறத்தலும்
முற்றுப்பெறா தேடலும்
வானின் நிற மாற்றத்துடன்….
அடிவான் சிவக்க
சிறகடிப்பைத் தொடங்கி
நீலத்துடன் நில்லாது தேடி
அஸ்தமிக்கையில் அடைகின்றன
ரத்தம் சிந்திய பாறையிடுக்கில்
நுழையும் அந்த சூரியனைப் போல்..
என் சிறகடிப்பில் வைகறையுடன் தொடங்கி
வழியில் இரைதேடலில் தான் இன்னும்
என் கூட்டடைதல்
அது என்னுடன் பத்திரமாய் வைத்திருக்கிறேன்
அது நிகழ்கையில்
அணையுடைத்து மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரளும்
அந்த மகிழ்ச்சி…
கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா..
நானும் பறவையும் ஒன்று தான்…
–அப்துல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரின் எழில்மிகு ஊராணி!-செங்கோட்டையன்
- பெற்ற தாயை போற்றுவோம்-சேயன் இப்ராஹீம் அபுதாபி
- தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே…-செங்கோட்டையன்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


