பீட்டர் அல்போன்ஸ் போல் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : சரத்குமார்
28th March 2011 · 0 Comments
“பீட்டர் அல்போன்ஸ் போல் பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை’ என சரத்குமார் கூறினார்.
தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கி விட்டது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்காசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வித்தியாசமான வேட்பாளர். தென்காசி தொகுதியை வளம் மிகுந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முழு முயற்சி எடுப்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் நான் தொகுதியிலேயே இருந்து மக்கள் சேவையாற்றுவேன். நான் மட்டும் தொகுதி மாறி போட்டியிடவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தொகுதி மாறியே போட்டியிடுகின்றனர். அவரவர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என ஜனநாயக நாட்டில் கூற முடியாது. பீட்டர் அல்போன்ஸ், கருப்பசாமி பாண்டியன் சொந்த தொகுதியிலா போட்டியிடுகின்றனர்.
இன்றைக்கு தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சந்திக்கலாம். வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்து பேசலாம். தென்காசியில் முழு நேர அலுவலகம் எனக்கு செயல்படும். தென்காசி தொகுதியில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் என் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து என்னை சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் இருந்தாரே! அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.
சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இதுபற்றி அவர் என்னுடன் “டிவி’யில் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? அப்போது அறிவாளி, உழைப்பாளி யார்? மக்களை ஏமாற்றும் பேர்வழி யார்? என்று தெரிந்து விடும்.
தேர்தல் பிரசாரம் “டிவி’யிலேயே முடிந்து விடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்யும். இப்போது இந்த சர்வாதிகார ஆட்சி மாற வேண்டும். ஊழல் புகாரில் மத்திய அமைச்சர் ராஜினமா செய்து சிறைக்குள் இருப்பது எந்த கட்சியில். அ.தி.மு.க.கூட்டணி வெற்றி கூட்டணி. அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோம். தென்காசி தொகுதியில் எனது வெற்றி நிச்சயம்” என்றார் சரத்குமார்.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் பதவியையும் திமுக கைபற்றியது .
- 14 -ஆவது வார்டு கவுன்சிலர்
- கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


