Filed Under:  தமிழ் நாடு

மமக வேட்பாளர்கள் எங்கும் உற்சாகம்

30th September 2011   ·   0 Comments

மனிதநேய மக்கள் கட்சி 24 மணி நேர அவகாசத்தில் தனித்து போட்டி என அறிவித்தது.
இது நாடாளுமன்றக் களமோ, சட்டமன்றக் களமோ அல்ல! இது உள்ளூர் மக்களின் நன்மதிப்பையும், உள்ளங்களையும் கவர்ந்தவர்கள் மட்டுமே வெற்றிக் கொடி நாட்ட முடியும்!
இரத்த தான சேவைகள், கல்வி உதவிகள், மார்க்கப் பணிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ முகாம்கள், வட்டியில்லா கடனுதவி திட்டங்கள் என கழகப் பணிகள் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
உள்ளாட்சிகளில் சமுதாய உணர்வாளர்கள் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதற்காக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து களம் காணும் மமகவின் துணிச்சல் மிகு முயற்சிகளை சமுதாய மக்கள் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.
ஜமாத்தார்கள், உலமாக்கள், சமுதாய சேவகர்கள், அறிவுஜீவிகள் என பலரும் மமக தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பல ஊர்களில் ஜமாத்துகள் சார்பில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற பல மஹல்லாக்களில் மமக வேட்பாளர்களை நிறுத்தாமல் சமுதாய முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளது.
இன்னும் பல இடங்களில் சமுதாய மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு பங்கம் ஏற்பட்டு மூன்றாவது நபர்கள் வெற்றி பெற்று சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கெட்டுப் போய்விடும் என அஞ்சும் இடங்களில் மமக பெருந்தன்மையோடு தனது வேட்பாளர்களை வாபஸ் பெற்றுள்ளது.
உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சியில் 60வது வார்டில் சீமா பஷீர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்று மமக வேட்பாளர் 55வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மமக வேட்பாளர், போட்டியிலிருந்து வாபஸ் பெற்றிருக்கிறார்.
பெருந்தன்மை, நிதானம், அரசியல் தெளிவுடன் மமக உள்ளாட்சி தேர்தலை அணுகியுள்ளது.
இன்று மமகவின் கொடிகள் பறக்க, பல்வேறு  இனமக்கள் சூழ மமக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
” வெல்லட்டும் வெல்லட்டும்
மனிதநேயம் வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
சமூக நீதி மலரட்டும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
இறுதி வெற்றி நமது அணிக்கே”
என்ற முழக்கங்களுக்கு மத்தியில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மமக சார்பில் கிருஸ்தவர்கள், இந்துக்கள், தலித்துகள், பெண்கள் என பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 மணி நேர அவகாசத்தில் புதிய முடிவை எடுத்து மமக தனது பலமுள்ள களங்களில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் சங்கங்கள் நற்பணி மற்றும் தொண்டு அமைப்புகளின் ஆதரவைப் பெரும் முயற்சியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மமக தொண்டர்கள் தனிநபர் சந்திப்புகளிலும், பிரமுகர்கள் சந்திப்புகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இம்முடிவை முன்பே எடுத்திருந்தால் இன்னும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்ய அவகாசமும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்திருக்கும் என்ற குறை பரவலாக உள்ளது. காரணம் நமது முடிவு தனித்து நிற்பது என்றதும் சங்கராபுரம் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சிகளில் சேர்மன் பதவிக்கு மமக சார்பில் இன்று அவசர அவசரமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காட்டுமன்னார்குடி பேரூராட்சியில் பொறியாளர் விமல்ராஜ் பேரூராட்சி தலைவருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால் இன்னும் ஒருநாள் அவகாசம் கிடைத்திருந்தால் இன்னும் பல இடங்களில் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகியிருக்கும். ஆனால் அதிமுக வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை நீட்டித்து, முடிவுகளைக் கூறாமல் காலம் தாழ்த்தி தந்திரத்தை கடைப்பிடித்ததால் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
எது எப்படியாயினும் ஒடுக்கப்பட்ட மற்றும் உணர்வுள்ள சிறுபான்மை மக்கள் கூடுதல் பிரதிநிதித்துவத்தைப் பெற உற்சாகமாக களமாடத் துணிந்த மமகவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
”ஊழலற்ற உள்ளாட்சி
அதுவே
மனிதநேய மக்கள் கட்சியின்
மனசாட்சி
என்ற தேர்தல் முழக்கத்துடன் மமக வேட்பாளர்கள் புறப்பட்டுள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் நமது பணிகளை அங்கீகரிக்க பிரார்த்தியுங்கள்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.