மேலப்பாளையத்தில் வரும் 19ம் தேதி சமுதாய விழிப்புணர்வு “ஷரீஅத் மாவட்ட மாநாடு’
18th February 2012 · 0 Comments
மேலப்பாளையத்தில் வரும் 19ம் தேதி சமுதாய விழிப்புணர்வு “ஷரீஅத் மாவட்ட மாநாடு’ நடக்கிறது.
இதுகுறித்து உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா இணைந்து நடத்தும் சமுதாய விழிப்புணர்வு ஷரீஅத் மாவட்ட மாநாடு வரும் 19ம் தேதி நடக்கிறது. இம்மாநாட்டில் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள நல்லொழுக்கம், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் உலமாக்களுக்கு பயிலரங்கம், பெண்களுக்கான நிகழ்ச்சி, உலமாக்கள் பங்கு பெறும் ஷரீஅத் கருத்தரங்கம் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளும் நடக்கிறது.
முதல் நிகழ்ச்சியாக ஆலிம்களுக்கான கம்ப்யூட்டர் பயிலரங்கம் நடக்கிறது.”மார்க்க பிரச்சாரத்தில் கம்ப்யூட்டர் மற்றும் இணைய தளத்தின் பயன்பாடு’ என்ற தலைப்பில் நடக்கிறது. இதற்கு ஜமாத்துல் உலமா ஆசிரியர் முகமது இப்ராகிம் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து காலை 10 மணிக்கு “இஸ்லாமிய ஷரீஅத்தில் பெண்களுக்கான உரிமைகளும், கடமைகளும்’ தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மஜ்லிசுல் உலமா தலைவர் சதக்கத்துல்லா தலைமை வகிக்கிறார். நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா துணை தலைவர் பக்ருத்தீன் ஆலிம் முன்னிலை வகிக்கிறார். உஸ்மானியா அரபிக் கல்லூரி ஹைதர் அலி துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் அபுதாகீர் கலந்துகொள்கிறார்.
மதியம் 2 மணிக்கு ஜின்னா திடலில் ஆலிம்கள் பங்கேற்கும் ஷரீஅத் கருத்தரங்கு “நான்கு மத்ஹபுகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு “அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா பொதுசெயலாளர் அப்துல் காதிர் கருத்துரை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் கலந்தர் மஸ்தான் சிறப்புரையாற்றுகிறார்.
“தஸவ்வுப்(சூபித்துவம்) ஷரீஅத்தின் அங்கமா?பங்கமா? தலைப்பில் மாநில ஜமாத்துல் உலமா துணை செயலாளர் ஹாமித் பத்ரி பேசுகிறார். “மார்க்கமும் மனோ இச்சையும்’ தலைப்பில் அப்துல் அஜீசும், “சமுதாய பிரச்னைகளும், சன்மார்க்க தீர்வுகளும்’ தலைப்பில் உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் காஜா முகைதீன் ஆகியோரும் பேசுகிறார்கள். இம்மாநாட்டில் நெல்லை மாவட்ட வட்டார, மாநகர, நகர மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி கூறினார். அப்போது மஜ்லிசுல் உலமா தலைவர் சதக்கத்துல்லா, செயலாளர் அலி ஹூசைன், ஒருங்கிணைப்பாளர் ஷாபி உடனிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


