Filed Under:  இந்தியா

11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும்-கர்நாடக உயர்நீதிமன்றம்

29th October 2010   ·   0 Comments

கர்நாடக சட்டசபையிலிருந்து 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பளித்தது. இதையடுத்து எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தப்பியுள்ளது.

எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டு கண்டங்களைத் தாண்டி விட்டது. இன்று 3வது கண்டத்தைத் தாண்டியது.

முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களையும், ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் போபய்யா.

பின்னர் நடந்த வாக்கெடுப்பில் குரல் ஆதரவு மூலம் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் சபையில் பெரும் அமளி மூண்டது. பின்னர் 16 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் பரத்வாஜ் 2வது நம்பி்ககை வாக்கெடுப்பு கோர எதியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி 3வது நாளே மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க அனுமதிக்குமாறு 5 சுயேச்சைகளும் கோரினர் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் நடந்த வாக்கெடுப்பிலும் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 11 பாஜக அதிருப்தியாளர்களின் வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அக்டோபர் 18ம் தேதி இரு வேறு தீர்ப்புகளை வெளியிட்டது. இதையடுத்து 3வது நீதிபதிக்கு வழக்கு விடப்பட்டது. மூன்றாவது நீதிபதியான சபாஹித் அக்டோபர் 22ம் தேதி இந்த வழக்கை விசாரித்து பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தார். அந்தத் தீர்ப்பு இன்று பிற்பகல் அளிக்கப்பட்டது.

கட்சித் தாவல் சட்டப்படி 11 பாஜக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் போபய்யா நீக்கியது செல்லும் என்று நீதிபதி சபாஹித் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக அரசுக்கு பெரும்பான்மை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதேபோல தகுதி நீக்கம் செய்யப்பட்ட 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இவர்களது பதவிப் பறிப்பு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் பாஜக அரசுக்கு பாதிப்பு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 11 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.