வருக ! ரமழானே ! வருக !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)
பசியைப் பகிர்ந்தளித்துப்
பட்டினியை உணரவைக்கும்
பத்திய மாதமே !
பத்திரமாக வா ! வா !
உன்னை வரவேற்க
இதயத்துக் கரங்களை
ஏந்துகிறோம் வா !
கலவைக் கொள்கைகளை
சலவை செய்து
ஈமான் கொடியில்
காயப் போட
ரமழானே வா !
எங்கள் ஈமான்
துருப்பிடித்துக் கிடக்கிறது !
சுட்டெரித்து அதனைச்
சுடரச் செய்ய வா வா !
பசித்தீயில் ஆன்மாவைப்
புடம்போடப் போகின்றோம் !
பரமனையே நினைந்துருகிப்
பசியாறப் போகின்றோம் !
எங்கள்
பந்திக்கு இலை விரிக்க
பாய்ந்தோடி வா !
கிழிந்தும் இழிந்தும்
நலிந்தும் மெலிந்தும்
கிடக்கின்ற எங்களை
பசிஊட்டச் சத்துகொண்டு
பக்குவப் படுத்த வா !
உமியை அரிசிஎன்றும்
நீர்க்
குமிழை நிஜமென்றும்
நம்பி ஏமாந்து
நட்டாற்றில் கிடக்கின்றோம் !
ஈமானை இதயத்தில்
ஏற்றிவைக்க நீ வா !
கானல் நீரில்
வலை விரித்துக்
காத்துக் கிடக்கின்றோம் !
அல்லாஹ்வின்
அருட்கடலில் வலைவிரிக்க
வலையோடு வா !
முள்வேலிக்குள் நாங்கள்
முகிழ்த்திருக்கும் ரோஜாக்கள் !
வேலிகள் எங்களை
வேதனைப் படுத்தாதிருக்க
அல்லாஹ்வின் கயிற்றோடு
(ஹப்லுல்லாஹ் )
அகிலத்திற்கு வா Buy Lasix !
நாங்கள் கழித்தல் குறிகளாய்க்
காலொடிந்து கிடக்கின்றோம் !
எங்களை
ஆச்சரியக் குறிகளாய்
ஆக்குதற்கு நீ வா !
திக்கெலாம் நாங்கள்
திசைமாறிக் கிடக்கின்றோம் !
திருமறை நபிவழித்
திசை காட்டும் கருவிகளை
தொலைத்துவிட்டு நாங்கள்
தொலைந்து போய்விட்டோம் !
எங்களைக் கண்டுபிடிக்க
ஈமான் கண்ணாடியை
இறக்குமதி செய்திடுவாய் !
இறக்குமுன் இறக்கும்
இரசவாதம் அறிந்திடவும்
பசியைப் பகிர்ந்தளிக்கும்
பக்குவம் புரிந்திடவும்
பாடப் புத்தகத்தைப்
பாருக்குக் கொண்டுவா !
ஆன்மக் கண் இமைவிரித்து
ஆயிரமாய்க் கரமேந்தி
உன்னை வரவேற்க
ரமழானே ! நாங்கள்
உறங்காமல் காத்திருப்போம்
ஓடிவந்து அருள் பொழிவாய் !